காலாப்பட்டு, ஜன. 28: காலாப்பட்டு மத்திய சிறைக்குள் கஞ்சா மற்றும் செல்போனை லோடுகேரியல் எடுத்துச் சென்ற தனியார் ஒப்பந்த ஊழியர் சிக்கினார். புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சிறைத்துறை ஐஜி ரவிதீப்சிங் சாகர் தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறைக் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது கைதிகள் யோகா மற்றும் சிலம்பம் சாகசம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்காக அங்கு ஷாமியானா பந்தல் உள்ளிட்டவை அங்கு போடப்பட்டிருந்தது. இதற்காக சிறைத்துறையின் பணி ஒப்பந்ததாரர் மூலம் அங்கு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அங்கு வெளியில் இருந்து ஷாமியானா உள்ளிட்ட பொருட்களை லோடு கேரியர் வாகனத்தில் ஏற்றிச் சென்ற அண்ணா சாலையில் உள்ள பிரபல எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் ஊழியரான வம்பாகீரப்பாளையம் பாஸ்கர் (39) என்பவருக்கு அங்குள்ள சக கைதிகளிடம் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரை சந்தேகத்தின்பேரில் சிறை பணியாளர்களே கண்காணித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பாஸ்கர் ஓட்டிவந்த லோடு கேரியர் வாகனத்தை திடீரென சோதனையிட்டனர்.