குத்தாலம் அடுத்த பாலையூர் அய்யனார் கோயிலில் நகை திருட்டு

குத்தாலம்,ஜன.28: குத்தாலம் அடுத்த பாலையூர் அய்யனார் கோயிலில் மர்ம நபர்கள் நகையை திருடிச்சென்றனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பேராவூர் பகுதியில் பழமை வாய்ந்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 25ம் தேதி இரவு பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோயிலை பூட்டி விட்டு சென்றவர், நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பாலையூர் போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கோவிலினுள் அய்யனார் சிலை அருகில் உள்ள சாமி பூர்ணா மற்றும் புஸ்கலா சிலையில் இருந்த சுமார் 1.1/4கிராம் மதிப்புள்ள 2 தாலி திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் பித்தளை அண்டா, மணி, உண்டியலில் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தசம்பவம் தொடர்பாக கோயில் பூசாரி பாலகிருஷ்ணன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாலையூர் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: