காஞ்சிபுரம் எம்பியின் தந்தை திமுக பிரமுகர் சிறுவேடல் கணேசன் படத்திறப்பு விழா: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எம்பியின் தந்தை திமுக பிரமுகர் சிறுவேடல் கணேசன் படத்திறப்பு விழா நடந்தது. அதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்தார். காஞ்சிபுரம் எம்பி செல்வத்தின் தந்தையும், திமுக பிரமுகருமான சிறுவேடல் வெ.கணேசன் படத்திறப்பு விழா நேற்று முன்தினம், காஞ்சிபுரம் அடுத்த சிறுவேடல் கிராமத்தில் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் படத்தை திறந்துவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது. நம்முடைய எம்பி செல்வத்தின் தந்தை கணேசன், கட்சியில் ஊராட்சி கிளை செயலாளர் முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவரை போலவே அமைதியான குணத்துடன் கட்சி பணியாற்றி செல்வம் எம்பி நிலைக்கு உயர்ந்துள்ளார். மறைந்த கணேசன், கட்சி நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கலந்துகொண்டவர். கட்சிக்கு உழைத்து கட்சி நடத்திய போராட்டங்களில் சிறைகண்ட செம்மல் அவர். மூத்த முன்னோடியாக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர். இளைஞர்கள் கணேசனை போல் எதிர்பார்ப்பின்றி கட்சிக்காக உழைக்க வேண்டும்.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் அனைவரும் காழ்ப்புணர்ச்சியை மறந்து தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைக்கவேண்டும். போட்டியிடும் அனைத்து இடங்களிலும் எதிர்க்கட்சியினர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு கடுமையாக உழைத்து திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், பனையூர் பாபு (விசிக), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்டி அரசு, செந்தில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், தேவேந்திரன், பூபாலன், சேகர், ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், வக்கீல் துரைமுருகன், படுநெல்லி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: