நில அபகரிப்பு புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் டவர் மீது ஏறி கார் டிரைவர் தற்கொலை மிரட்டல்: மனைவி மற்றும் குழந்தைகள் உருக்கமாக பேசியபின் இறங்கி வந்தார்

பூந்தமல்லி: நில அபகரிப்பு புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த கார் டிரைவர், மதுரவாயல் அருகே காவலர் குடியிருப்பில் உள்ள டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். மனைவி மற்றும் குழந்தைகள் உருக்கமாக பேசியபின் கீழே இறங்கி  வந்தார். சென்னை மதுரவாயலை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் நாகராஜ் (41). கார் டிரைவர். இவருக்கு சொந்தமாக திருவள்ளூர் அருகே அரண்வாயல் பகுதியில் பூர்வீக சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை, நாகராஜின்  உறவினர்கள் ஏமாற்றி, போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகராஜ் பலமுறை நிலத்தை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த நாகராஜ் நேற்று அதிகாலை மதுரவாயல் காவலர் குடியிருப்பில் உள்ள வாக்கி டாக்கி டவர் மீது ஏறினார். பின்னர் அவர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதை பார்த்ததும், அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  நாகராஜை கீழே இறங்கி வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார். தகவலறிந்து மதுரவாயல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள், நாகராஜிடம் சமரசம் பேசி, கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவரது மனைவி மற்றும் குழந்தைகளை வரவழைத்து, அவருடன் உருக்கமாக பேச வைத்தனர். சுமார் ஒருமணி நேர போராட்டத்துக்கு பின் நாகராஜ் வாக்கி டாக்கி டவரில் இருந்து கீழே இறங்கினார். அவரிடம், போலீசார் விசாரணை நடத்தி  நிலம் அபகரிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அனுப்பி வைத்தனர். வாக்கி டாக்கி டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நாகராஜ் கீழே இறங்கி வந்ததும், அங்கிருந்த தனது மனைவி மற்றும் மகளை கட்டி பிடித்து அழுத காட்சி, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் நெஞ்சை உருக்கியது.

Related Stories: