இளம்பெண் தற்கொலை கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

விருத்தாசலம், ஜன. 26: விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள இருளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா(30). இவர் விருத்தாசலம் வருவாய்த் துறையில் மங்கலம்பேட்டை குறு வட்டத்தின் நில அளவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிபாரதி(21). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆன நிலையில், ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மணிபாரதியிடம் வரதட்சணை கேட்டு சிவா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன், மணிபாரதி கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீடான நெய்வேலி அருகே உள்ள தொப்பிளிக்குப்பம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட மணிபாரதி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்று வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிபாரதி இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணி பாரதியின் உயிரிழப்புக்கு அவரது கணவர் சிவா மற்றும் அவரது குடும்பத்தினரின், வரதட்சணை கொடுமை தான் காரணம். அதனால் சிவாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகம் முன் விருத்தாசலம்- கடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பு நிலவியது.

Related Stories: