சேலம்:சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (26ம்தேதி) காலை காந்தி ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா நடக்கிறது. கொரோனா காரணமாக கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 73வது குடியரசு தின விழா, இன்று (26ம்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் குடியரசு தினவிழா நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கவிதா, காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேசிய கொடியேற்றும் கம்பத்திற்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டது. தொடர்ந்து அலங்கார கொடிகள் மற்றும் வளைவு அமைக்கும் பணிகள் நடந்தன. கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக நடக்கும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.