×

குமாரபாளையத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடுகளை அமைச்சர், கலெக்டர் ஆய்வு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் பார்வையிட்டனர். குமாரபாளையத்தில் நாளை (27ம்தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். போட்டி நடைபெறும் இடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் பார்வையிட்டனர். போட்டி ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், ‘ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனிபாதை அமைக்கப்பட்டுள்ளது.

காளைகள் வெளியேறும் இடத்தில் இரண்டடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. காளைகளை ஆய்வு செய்ய கால்நடை மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டு 24 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். மைதானத்தில் போதிய முதலுதவி சிகிச்சையும் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக 150 பார்வையாளர்களே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்,’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல், ஆர்டிஓ இளவரசி, பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் தமிழரசி, குமாரபாளையம் நகர திமுக செயலாளர் செல்வம், பள்ளிபாளையம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags : Jallikattu ,Kumarapalayam ,
× RELATED ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு