கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், பெண்கள் பங்கேற்று பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண கால பைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் சூரன்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.