வருசநாடு: ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டு அருகே பொன்னன்படுகை ஊராட்சியில் கொங்கரவூ கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் குறுக்கே சிறு ஆறு செல்கிறது. பாலம் வசதியில்லாமல் கடந்த 60 ஆண்டு காலமாக இப்பகுதியில் விளைகின்ற விவசாய விளைபொருட்களான தக்காளி, அவரை, பீன்ஸ், எலுமிச்சை, பப்பாளி, பருத்தி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை தேனி, ஆண்டிபட்டி, மதுரை, கம்பம், குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு மழைகாலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே இப்பகுதி விவசாயிகள் சாலைகளில் தடுப்புச் சுவர் மற்றும் சிறு பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பொன்னன்படுகை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கா காத்தமுத்து கூறுகையில், கடந்த 60 ஆண்டு காலமாக பாலம் வசதி வேண்டி பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால் நிதி பற்றாக்குறையின் காரணமாக பாலம் மற்றும் சாலை வசதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.