மனைவியை பிரிந்து வீட்டின் மேல்தளத்தில் வசித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மர்ம சாவு

ஆவடி: மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டின் மேல் தளத்தில் வசித்த, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மர்மமாக இறந்து கிடந்தார். திருமுல்லைவாயல் வேணுகோபால் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர்(68). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.  இவரது மனைவி கீதா(60). தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ரவிசங்கர் வீட்டில் முதல் தளத்திலும், கீதா கீழ்தளத்தில் வசித்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் வீட்டு பணிப்பெண் விஜயா(47), ரவிசங்கருக்கு மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு மேல் தளத்திற்கு சென்றார். அப்போது, அங்கு அவர் இல்லை.  ரவிசங்கரை வீட்டின் கீழ் தளத்தில்  தேடி உள்ளார். அப்போது, ரவிசங்கர் கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.

தகவலறிந்த ஆவடி  தீயணைப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி ரவிசங்கர் உடலை மீட்டனர். மேலும், திருமுல்லைவாயல்  போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிசங்கர் மர்மச்சாவு குறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: