நாங்குநேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ் 1 மாணவி பலி

நாங்குநேரி, ஜன. 26:  நாங்குநேரி அருகே மர்மக் காய்ச்சலுக்கு பிளஸ் 1 மாணவி பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த ஏமன்குளத்தைச் சேர்ந்தவர் சிவனணைந்த பெருமாள் (55). கூலித்தொழிலாளி. பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1  படித்துவந்த இவரது மகள் ஸ்வேதா (17), ஊரடங்கு விடுமுறையால் வீட்டில் இருந்து வந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் காய்ச்சலும் ஏற்பட்டதை அடுத்து பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவியை பெற்றோர் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஸ்வேதாவின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது.  இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் நாங்குநேரி வட்டாரத்தில் ஏராளமானோர் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: