பெரம்பலூர்,ஜன.26: பெரம்பலூர் அருகே தொண்டமாந்துறை கிராமத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த கல்லூரி மாணவியின் சடலத்தை இஸ்லாமியர்கள் அடக்கம் செய்தனர்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நாமக்கல் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரின் சடலத்தை நல்லடக்கம் செய்துதர கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் அந்த அமைப்பின் ஆம்புலென்ஸ் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் நாமக்கலில் இருந்து தொண்டமாந்துறை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த அமைப்பின் கோவிட் ரிலீப் கமிட்டி தலைவர் அகமது இக்பால் தலைமையில் உலக சுகாதார நிறுவனம் காட்டிய வழிமுறைகளோடு, தொண்டமாந்துறை கிராமத்திலுள்ள கிறிஸ்தவர்களின் அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்து கொடுத்தனர். கிறிஸ்தவ பெண்ணின் உடலை இஸ்லாமிய அமைப்பினர் நல்லடக்கம் செய்து கொடுத்த சம்பவம் தொண்மாந்துறை சுற்றுவட்டார கிராமங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.