செய்யாறு, ஜன.26: செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கக்கோரி பைக்கில் பேரணியாக சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, எம்எல்ஏவிடம் மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் மனு அளித்தனர். செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வந்தவாசியில் நடந்த கூட்டத்தில் வாக்குறுதி அளித்தார். அதனை நினைவூட்டும் விதமாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்து கொடுக்க எம்எல்ஏ ஒ.ஜோதிடம் கோரிக்கை மனு அளிக்க செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பைக் பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.