கடலூர், ஜன. 25: கடலூர் மாவட்டத்தில் மேலும் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 70,041ஆனது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் இரண்டாவது அலையில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக பாதிப்பின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருந்தது. இந்நிலையில் தற்போது மூன்றாவது அலையில் மீண்டும் நோய் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 416 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70,041ஆனது.
நேற்று சிகிச்சை முடிந்து 314 பேர் வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 65,929 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 2,831 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 399 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்து 57 ஆயிரத்து 439 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் ஏற்கனவே நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 329 பேர் அடங்குவர். நோய் பரவல் தொற்று அதிகரித்துக் காணப்பட்ட 24 பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் நோய் பரவல் காரணமாக ஒருவர் இறந்த நிலையில் இதுவரையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 882 ஆனது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டார்.