சென்ட்ரலில் இருந்து ஆலப்புழா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட பைக்: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர், ஜன.24: திருவள்ளூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்துசெல்லப்பட்ட பைக்கால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆலப்புழாவிற்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் ரயில்வே மார்க்கத்தில் செவ்வாப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் எக்ஸ்பிரஸ் வருவதை பார்க்காமல் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் அருகே வந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் செய்வது அறியாமல் தனது மோட்டார் சைக்கிளை மட்டும் தண்டவாளத்திலேயே விட்டு, விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரயிலுக்கு அடியில் மாட்டிய மோட்டார் சைக்கிள் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், புட்லுர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது ரயிலுக்கு அடியில் சத்தம் வருவதை உணர்ந்த ரயில் ஓட்டுனர்கள் உடனடியாக புட்லூர் ரயில்வே நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பார்த்தபோது ரயில் இன்ஜினில் மோட்டார் சைக்கிள் சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, ரயிலுக்கு அடியில் சுக்குநூறாக உடைந்திருந்த மோட்டார் சைக்கிளை புட்லூர் கிராமவாசிகள் 30க்கும் மேற்பட்டோர் இணைந்து சுத்தியால் உடைத்து 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வெளியே எடுத்தனர்.

 இதனால் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. மேலும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யார் என்பது குறித்து ரயில்வே நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: