×

3வது ஞாயிறு முழு ஊரடங்கில் வெறிச்சோடிய சாலைகள்

திருச்சி, ஜன. 24: தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமெடுக்க தொடங்கி உள்ள நிலையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த 6ம் தேதி முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்படும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த 9ம் தேதி, 16ம்தேதி மற்றும் நேற்று (23ம் தேதி) பொது ஊரடங்கு அமலுக்கு வந்தது. மாநகரில் உள்ள 7 காவல் சோதனை சாவடிகளை தவிர கூடுதலாக 31 இடங்களில் பேரிகார்டு அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் அரசு பஸ்கள் அந்தந்த டெப்போக்களில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது. மேலும், மாநகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட தற்காலிக சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் வாகனங்களில் செல்லவும் பொதுமக்கள் தயக்கம் காட்டினர். இதனால் மத்திய பஸ் நிலையம், சென்னை பைபாஸ் சாலை, தி்ண்டுக்கல் சாலை, கருமண்டபம், சத்திரம் பஸ் நிலையம், பெரியகடைவீதி, உறையூர், தில்லை நகர், ரங்கம் உள்ளிட்ட மாநகரின் முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், அத்தியாவசியமாக மருத்துவமனைக்கும், மருந்து கடைகளுக்கும் ஒருசிலர் மட்டும் டூவீலர்களில் சென்றனர். ஆனாலும் தை மாதம் முகூர்த்தம் என்பதால் ஒரு சிலர் தங்கள் வீட்டில் விசேஷ நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் அழைப்பிதழுடன் வாகனங்களில் வந்தவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். மற்ற ஆவணங்கள் இன்றி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் நேற்று முழு ஊரடங்கின் போது, காரணமின்றி வெளியே முககவசம் இன்றி வந்த 550 பேர், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி