சென்னையில் தீவிர சோதனை முகக்கவசம் அணியாத 3,938 பேர் மீது வழக்கு: ரூ.7.87 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாத 3,938 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 600 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காத 301 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 500 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து, கொரோனா விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு நேர ஊரடங்கில், சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் தலைமையில், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 161 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள் மற்றும் 3 இலகுரக வாகனம் என மொத்தம் 173 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், முகக்கவசம் அணியாத 3,938 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 600 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காத 301 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 500 அபராதமும் வசூலிக்கப்பட்டது.

Related Stories: