அக்ரி கிளினிக் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர், ஜன.24: திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் துறை நிதியுதவியுடன் அக்ரி கிளினிக் அமைப்பதற்கு வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 5 வேலையில்லாத வேளாண் பட்டதாரிகளுக்கு அக்ரிகிளினிக் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களான காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயந்திர வாடகை மையம் அமைத்தல், பசுமை வீடு அமைத்தல், இயற்கை இடு பொருட்களான உயிர் பூச்சிக்கொல்லி மற்றும் உயிர் பூஞ்சானக்கொல்லி தயாரித்தல், இடைதரகர் இல்லாமல் உள்ளுர் காய்கறி, பழங்கள் மற்றும் இதர விவசாய விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல், விதை, உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை மையம் அமைத்தல், நுண்ணீர் பாசனக்கருவிகளை பழுது நீக்கும் மையம் அமைத்தல், வேளாண் விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

மனுதாரர் 21 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் போன்ற பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்பவராக இருக்க கூடாது. மனுதாரர் கணினி அறிவு பெற்றவராகவும், வேளாண் சார்ந்த செயலிகளை பயன்படுத்துபவராகவும் இருக்கவேண்டும். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவேளாண் பட்டதாரி மட்டுமே பயன்பெற இயலும். அவர் செய்யும் தொழிலுக்கு அவர் மட்டுமே உரிமைதாரர். நிலம் மற்றும் அறை கலன்களுக்கான தொகை திட்டமதிப்பீட்டில் சேராது. இத்திட்டத்தில் பயன்பெற வயது வரம்புக்கான ஆதாரமாக 10ம் அல்லது 12ம் வகுப்புசான்றிதழ், வேளாண் பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் மற்றும் குடும்ப அட்டைநகல், மனுதாரர் பெயரில் உள்ள வங்கிக்கணக்கின் நகல், கடனுக்கான சம்பந்தப்பட்ட வங்கியில் பெறப்பட்ட வங்கி உத்தரவாதம் ஆகிய ஆவணங்களுடன் ஆர்வம் உள்ள வேளாண் பட்டதாரிகள் மாவட்ட வேளாண் இணை இயக்குநருக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம். விண்ணப்பங்கள் பெறப்பட்டபின் தகுதியான திட்டவரைவுகள் மாவட்ட அளவிலான அனுமதிக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, 3 வாரங்கள் மனுதாரருக்கு குடுமியான் மலையில் உள்ள ஸ்டாமின் பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு தொழில் முனைவோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு அக்ரிகிளினிக் அமைக்க நிதி விடுவிக்கப்படும்.இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: