கரூர், ஜன.24: கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று மூன்றாவது முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததோடு, பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல், தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை முழு ஊரடங்கை முன்னிட்டு, மருந்து கடை, பால்கடை போன்ற உட்பட அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.
கரூர் மாநகரத்தை பொறுத்தவரை எப்போதும் அதிகளவு வாகன நெருக்கத்துடன் காணப்படும் ஜவஹர் பஜார், தெற்கு மற்றும் வடக்கு பிரதட்சணம் சாலை, கோவை சாலை, லைட்ஹவுஸ் கார்னர், தாந்தோணிமலை, ராயனூர் போன்ற பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடியே காணப்பட்டது. சாலைகளில் ஒரு சில இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனமும் செல்லவில்லை. மேலும், நகர நுழைவு வாயில் பகுதிகளான வெங்கமேடு, திருமாநிலையூர், சுங்ககேட், திருக்காம்புலியூர் போன்ற பகுதிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர். கரூர் பஸ் நிலையம் அருகேயுள்ள மனோகரா கார்னர் பகுதியில் போலீசார் அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரணை செய்த பிறகே அனுப்பி வைத்தனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்து பகுதிகளும் வெறிச்சோடியே காணப்பட்டது.