ஊட்டி,ஜன.22: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வர கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. இதனால் ஊட்டியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா,ரோஜா, பூங்கா,குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா,தேயிலை பூங்கா,மரவியல் பூங்கா போன்றவைகளும், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள தொட்டபெட்டா,பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம், வனத்துறை கட்டுபாட்டில் உள்ள சூட்டிங்மட்டம், கேர்ன்ஹில், கோடநாடு காட்சிமுனை, முதுமலை உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. கொரோனா இரண்டாவது அலை குறைந்தற்கு பின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் அனைத்து சுற்றுலாத்தலங்களும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கேரள, கர்நாடகாவில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. இம்மாத துவக்கம் முதல் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்து அமல்படுத்தப்பட்டுள்ளது.