மயிலார் முன்னிட்டு ஊசூரில் நடந்த மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்; டெல்லி குழுவினர் திடீர் ஆய்வு

அணைக்கட்டு, ஜன.22: மயிலார் முன்னிட்ட ஊசூரில் நடந்த மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை டெல்லி குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அணைக்கட்டு தாலுகா ஊசூர் கிராமத்தில் மயிலார் முன்னிட்டு காளைவிடும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் தலைமையில் தாசில்தார்கள் குமார், விஜயகுமார், மண்டல துணை தாசல்தார் மெர்லின், வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், விஏஓ அரவிந்த், ஊராட்சி செயலாளர் பெருமாள், ஊராட்சி வார்டு உறுப்பினர் குமுதா பெருமாள் மற்றும் விழாக்குழுவினர் உள்பட அனைவரும் விழா உறுதிமொழி ஏற்று கொண்டதை தொடர்ந்து விழா காலை 11 மணியளவில் தொடங்கியது. இதில் புலிமேடு, கோவிந்தரெட்டிபாளையம், ஊசூர் வெளியூர் மற்றும் உள்ளூர் மாடுகள் என 83 காளைகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டன.

ஊசூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் விழா நடக்கும் தெருவில் திரண்டு சீறி பாய்ந்து ஒடிய காளைகளை உற்சாகத்துடன் விரட்டினர். பரிசுகள் இன்றி விழா நடந்ததால் ஒரே மாடு அதிக சுற்றுகள் வரை ஓடியது. தொடர்ந்து விழா பிற்பகல் 2 மணியளவில் முடிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக டிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அரியூர் போலீசார் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து மாடுவிடும் விழாவை டெல்லி குழுவை சேர்ந்த இந்திய விலங்குகள் நலவாரிய அமைப்பின் உறுப்பினர்கள் ஷோபா, சுமதி மற்றும் வேலூர் கால்நடை பாதுகாப்பு துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குனர் அந்துவன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பங்கேற்று மாடுகள் துன்புறுத்தப்படுகிறதா, மாடுகளுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து கண்கானித்தனர்.  மேலும், காயமடைந்த பார்வையாளர்கள் 7 பேருக்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் ஊராட்சி துணை தலைவர், கிராம மேட்டுகுடிகள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: