போளூர் கிளைச்சிறையில் கலவரத்தில் கைதானவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று

போளூர், ஜன.22: போளூர் கிளைச்சிறையில் கலவரத்தில் கைதானவர்கள் உட்பட 10 கைதிகளுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ெகாரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 59,182 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, 2,441 பேர் சிகிச்சையில் உள்ளனர். பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இனிவரும் நாட்களில் பாதிப்பு கண்டறியப்படுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக உயரும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கலசபாக்கம் அடுத்த வீரலூர் கிராமத்தில் கடந்த 16ம் தேதி மயானப்பாதை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, போளூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் வீரலூர் கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த வழிப்பறி வழக்கில் கைதான ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 10 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: