கலசபாக்கம், ஜன.22: கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன. இதன் மூலம் நடுத்தர மக்கள் பயன்பெற்று வந்தனர். இதையொட்டி, ஊரக வளர்ச்சி துறை மூலம் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் பட்டியல் தயாரித்து, வீடு கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால் தகுதியான பயனாளிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்துள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.