ரயில்வே மேம்பால இடம் அளவீடு பணி தொடக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

மார்த்தாண்டம், ஜன. 22: மார்த்தாண்டத்திற்கும்  கருங்கலுக்கும் இடையே விரிகோட்டில் ரோட்டின் குறுக்கே ரயில்வே கிராசிங் உள்ளது. ரயில்கள் செல்லு ம்போது இந்த ரோடு அடைக்கப்படும். அப்பொழுது இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள்  வரிசையாக காத்து கிடப்பது வாடிக்கையாக உள்ளது.  எனவே இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு சர்வே செய்யும் பணிகளும் நடந்தது. இதனிடையே விரிகோட்டில் தற்பொழுது ரயில் கிராசிங் இருக்கின்ற அதே பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று விரிகோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல கட்ட போராட்டம் நடத்தியுள்ளனர். இதே தடத்தில் மேம்பாலம் அமைப்பதற்காக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான முதல் கட்ட பணியும் தொடங்கி உள்ளனர். ஆனால்  அதிகாரிகள் தரப்பில் குறும்பேற்றி அம்மன் கோயில் அருகே இருந்து -  மாமூட்டுக்கடை வரை  வயல்களின் வழியாக மேம்பாலத்தை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்கு இந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை பொறியாளர் மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் ஏற்கனவே முடிவு செய்த    பாதையில் நில ஆர்ஜிதம் செய்வதற்கான அளவீடு பணிகளை துவங்கினர். இதற்கு மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் விரிகோடு பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நில ஆர்ஜித அளவீடு பணிகள் போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்றது.

Related Stories: