திண்டிவனம், ஜன. 22: திண்டிவனத்தில் பைக்கில் சென்ற பெண் காவலரிடம் தாலி செயின் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் மரக்காணம் சாலை, காமராஜர் தெருவை சேர்ந்த சரவணன் மனைவி சத்யா(34). இவர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அலுவல் சம்பந்தமாக பைக்கில் பிரம்மதேசம் காவல் நிலையம் சென்றுவிட்டு மீண்டும் திண்டிவனம் வந்து கொண்டிருந்தார். மரக்காணம் சாலை அருகே உள்ள பங்க்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மரக்காணம் கூட்டுப்பாதை வளைவில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் காவலரின் பைக்கை வழிமறித்து கன்னத்தில் அடித்து, அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின் மற்றும் ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.