முன்னாள் காதலி 2 முறை கர்ப்பம்: திருமணமான வாலிபர் கைது

திருவள்ளூர்: முன்னாள் காதலியை 2 முறை கர்ப்பமாக்கிய திருமணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் அடுத்த கொண்டஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் எட்வர்ட்(27). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றினர். சில நேரங்களில் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் அப்பெண் கர்ப்பம் தரித்துள்ளார். பின்னர் கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் எட்வர்ட் வீட்டுக்கு தெரிந்தது. இதனால் யாருக்கும் தெரியாமல், அத்தை மகளை எட்வர்ட்க்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமண விவகாரம் அப்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் அவர் எட்வர்டுடன் வாக்குவாதம் செய்தார். அவரை சமாதானப்படுத்தி, திருமணம் செய்து கொள்வதாக மீண்டும் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகியுள்ளார். அதற்கு பிறகும் அவரை திருமணம் செய்ய எட்வர்ட் மறுத்துள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், `என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய எட்வர்ட் மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதன்படி திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் உத்தரவின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து எட்வர்டை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து எட்வர்ட், திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த எட்வர்ட்டின் தந்தை தியாகராஜன் (52), தாய் பத்மாவதி (40), அக்கா சந்தியா (30) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: