×

முக்கொம்பில் புதிய கதவணை 92 சதவீதம் பணிகள் நிறைவு நேரில் ஆய்வு செய்த கலெக்டர் தகவல்


திருச்சி, ஜன. 21: திருச்சி, முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணைப் பணிகளை கலெக்டர் சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியில் இதுவரை தெற்கு மற்றும் வடக்கு கொள்ளிட கதவணையில் அஸ்திவார பணிகள், தூண்களை உயர்த்தும் பணிகள், பாலம் அமைக்கும் பணிகள், நீர் வழிந்தோடும் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளன. வடக்கு கொள்ளிட கதவணையில், தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள், முன்புறம் சிமெண்ட் கான்கிரீட் கட்டைகள் அமைக்கும் பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரையிலான கரையை பலப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள், கலிங்கு பாலம் (ஊசி பாலம்) அமைக்கும் பணிகள் மற்றும் காவிரி பாலத்துடன் புதிய கதவணையை இணைக்கும் அணுகு சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் கலெக்டர் கூறியதாவது: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழைய கதவணைக்கு 75 மீ கீழ்புறம் தெற்கு கொள்ளிடத்தில் 628 மீட்டர் நீளத்திற்கு 45 கண்வாய்கள் மற்றும் வடக்கு கொள்ளிடத்தில் 138 மீட்டர் நீளத்திற்கு 10 கண்வாய்கள் என ஆக மொத்தம் 766 மீட்டர் நீளத்திற்கு 55 கண்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கதவணையில் போக்குவரத்திற்கு ஒரு வழி சாலை வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் துரிதமாக நடைபெற்று தற்சமயம் 92 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் இதரப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 1,688 மீட்டர் நீளமுள்ள கசிவில்லா சுவர் முழுவதும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1,532 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுசுவரில் 1,467 மீட்டர் நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளன. அணையின் மேல் மற்றும் கீழ்புறத்தில் தேவையான 7,800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில் 7320 கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 55 கண்வாய்களில் அடித்தளம் அமைக்கும் பணிகளில் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 766 மீட்டர் நீளம் கொண்ட ஒரு வழிப் பாலத்தில் முழுவதும் முடிக்கப்பட்டுள்ளன. 55 கண்வாய்களின் மூடு பலகைகள் முழுவதும் செய்து முடிக்கப்பட்டது. இதில் 53 மூடு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை உள்ள நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் மே மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mukkom ,
× RELATED கர்நாடக அரசை கண்டித்து முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி