வேலைவாய்ப்பு அதிகரிக்கும் கிராபைட் ஆலை விரிவாக்கப்படுமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை, ஜன.21: சிவகங்கை அருகே உள்ள கிராபைட் ஆலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை அருகே கோமாளிபட்டி சேந்திஉடையநாதபுரத்தில் தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம்(டாமின்) உள்ளது. கிராபைட் கனிமம் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் கோமாளிபட்டி, தேவனிப்பட்டி, ஊகுளத்துப்பட்டி, கண்டாங்கிபட்டி, புதுப்பட்டி, காரம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இப்பகுதி கிராம எல்லைவரை பரவியுள்ளது. 1994ம் ஆண்டு இயங்க தொடங்கிய இந்த ஆலையில் நிலத்தில் உள்ள கல்லை வெட்டியெடுத்து அதிலிருந்து கிராபைட்டை பவுடராக பிரித்து எடுக்கும் பணி நடக்கிறது. கிரேடு வாரியாக உள்ள கிராபைட் பெயிண்ட், குருசுபுல்(தங்கம், இரும்பு உள்ளிட்ட உலோகங்களை உருக்க பயன்படும் உலை), ராக்கெட், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் உள்ளிட்ட அதிக வெப்பநிலை தாங்கும் பொருட்கள் தயார் செய்ய பயன்படுகிறது.

இங்கு தயார் செய்யப்படும் கிராபைட் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தொழிற்சாலை தொடங்கிய போது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் போதிய விரிவாக்க திட்டமின்றியே தற்போதும் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை தொடங்கப்பட்டபோது தென் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த விரிவாக்கமும் இதுவரை செய்யப்படவில்லை. தொடக்க நிலையில் இருந்ததுபோல் தற்போதும் 200 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பணியாற்றுபவர்களுக்கும் அடிக்கடி ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர் கேட்டால் ஆலை நஷ்டத்தில் இயக்குவது போல் காட்டினர். இதனால் ஆலை முடக்கப்படும் நிலையில் உள்ளது. ஊழியர்கள் கூறுகையில், அரசே நேரடியாக கனிமங்களை விற்பனை செய்யாமல், தனியாரிடம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் தற்போது ஆலை முற்றிலும் செயல்படாமல் முடக்கப்படும் நிலை உள்ளது. ஆலைக்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. அதனால் ஊதியம் வழங்குவதிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்றனர்.

Related Stories: