×

விவசாயிகள் விதை பரிசோதனை செய்யலாம் அலுவலர் வேண்டுகோள்

பரமக்குடி, ஜன. 21: விவசாயிகள் விதை சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக அவசியம் ஈரப்பதம் மற்றும் ரகத்தூய்மை அறிந்து விதைகளை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று விதை பரிசோதனை அலுவலர் கேட்டுக்கொண்டார். விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்து விதையின் ஆயுள்காலம் நிர்ணயிக்கப்படுவதால், சரியான ஈரப்பதத்தில் விதைகளை பூச்சி நோய் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் சேமித்து வைக்கலாம். விதைகளில் பிற ரக கலவன் குறிப்பிட்ட அளவிற்கு கூடுதலாக இருக்க கூடாது. பிற ரக விதைகள் அதிகளவில் கலந்து இருக்குமேயானால், அவற்றின் வயது வித்தியாசம் காரணமாக வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சி அடையும்.

இதனால், ஒரே சமயத்தில் அறுவடை செய்ய இயலாது. முக்கியமாக கலப்பு அதிகமுள்ள விதைகளை அடுத்த பருவத்திற்கு விதைப்பதற்கு விதையாக பயன்படுத்த இயலாது. மேலும், கலப்பு காரணமாக அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்படும். எனவே, விவசாயிகள் தங்கள் விதையின் ஈரப்பதம் மற்றும் பிறரக விதைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை அறிந்து கொண்டு பின்பு விதைகளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விதை பரிசோதனை செய்ய ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 கட்டணமாக செலுத்தி தங்கள் விதைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை மாதிரிக்கான பயிர், ரகம், குவியல் எண், முகவரி ஆகிய விவரங்களுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விதை மாதிரிகளை, பரமக்குடி விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தால் விதை பரிசோதனை முடிவுகள் தங்களது முகவரிக்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும் என விதை பரிசோதனை அலுவலர் மகானூலட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர் முருகேஸ்வரி தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு