விழுப்புரத்தில் நள்ளிரவில் பரபரப்பு பெரியார் சிலையை இடித்து தள்ளிய கண்டெய்னர் லாரி l திமுக, அதிமுகவினர் மறியல் போராட்டம்

விழுப்புரம், ஜன. 21: விழுப்புரத்தில் நள்ளிரவு கண்டெய்னர் லாரிமூலம் பெரியார் சிலை முழுவதும் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை கண்டித்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் திருவிக வீதி, காமராஜர் வீதி சந்திப்பு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக பெரியார் சிலை உள்ளது. 3 அடி பீடத்தின் மீது 6 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டு, இரும்புக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. பெரியாரின் நினைவு மற்றும் பிறந்தநாளில் அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு திருவிக வீதி வழியாக சென்ற ஒரு கண்டெய்னர்  லாரி காமராஜர் சாலையில் வளையும்போது, பெரியார் சிலை பீடத்தில் மோதி முற்றிலும் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த நகர காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து லாரியை மடக்கிப்பிடித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், மகாராஷ்டிரா மாநிலம் வால்கி பகுதியைச் சேர்ந்த மச்சீந்திராதபலி(52) என்பது தெரியவந்தது. மேலும், புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்திலிருந்து புனேவுக்கு டயர்களை ஏற்றிச்சென்றதும், அப்போது, புதுச்சேரி மார்க்கத்திலிருந்து வந்த மச்சீந்திராதபலி, சென்னை சாலையை கடப்பதற்கு நான்குமுனைச்சந்திப்புக்கு பதிலாக காந்திசிலை வழியாக சென்றதும், வழிதவறி சென்றபோது பெரியார் சிலை கண்டெய்னர் லாரிமூலம் இடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த தகவல் காட்டுத்தீபோல் பரவிய நிலையில், அங்கு அரசியல்கட்சியினர் குவிந்தனர். திமுக நகர செயலாளர் சக்கரை தலைமையில் குவிந்த திமுகவினர், பெரியார் சிலையை இடித்த டிரைவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனடியாக புதிய சிலையை நிறுவவேண்டும் என்று போலீசாரிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதேபோல், அதிமுகவினரும், திராவிடர் கழகத்தினரும் பெரியார் சிலை இடித்துசேதப்படுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு வந்த அதிகாரிகள், சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தபின்னர் போராட்டக்காரர்கள் கலைந்துசென்றனர். இதனைத்தொடர்ந்து, தாசில்தார் ஆனந்தகுமார் தலைமையிலான ஊழியர்கள் சேதமடைந்த சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று வைத்தனர். இதுகுறித்து, கிராமநிர்வாக அலுவலர் செந்தமிழ்ச்செல்வன் அளித்தபுகாரின் பேரில் டிரைவர் மச்சீந்திராதபலியை கைது செய்தனர். இதனிடையே, பெரியார் சிலை இடிக்கப்பட்ட பகுதியை ஆட்சியர் மோகன், எஸ்பி நாதா மற்றும் எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Stories: