×

பண்ருட்டி அருகே பரபரப்பு திருமண விழாவில் முறைமாமனுடன் நடனம் மணப்பெண்ணுக்கு மணமகன் பளார் கோபத்தில் முறைமாமனை மணம் முடித்த மணப்பெண்

பண்ருட்டி, ஜன. 21:    பண்ருட்டியில் திருமண விழாவில் முறைமாமனுடன் நடனம் ஆடியதால் மணப்பெண்ணை மணமகன் பளார் என அறைந்தார். இதனால் முறை மாமனை மணப்பெண் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே மணமகன் மது குடித்த மயக்கத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் லட்சுமி, இந்த குடிகார மணமகனும், வேண்டாம், திருமணமும் வேண்டாம் என மாலையை கழற்றி வீசிவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் தாலிகட்டும் நேரத்தில், மணப்பெண் திருமணத்துக்கு மறுத்ததால், தோழியாக வந்த பெண்ணை, கரம் பிடித்தார் மாப்பிள்ளை என்ற சம்பவமும் அரங்கேறி உள்ளது. ஆனால் மேடையில் நடனம் ஆடியதால் மணமகன் அறைந்ததால் முறைமாமனை மணப்பெண்ணை, மணம் முடித்த சம்பவம் பண்ருட்டியில் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
  கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வசித்து வரும் 23வயது இளம்பெண்ணிற்கும் காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 25வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நேற்று பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பெண் அழைப்பு விழா நடந்தது. அப்போது, விழாவிற்கு வந்திருந்த இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடினர். அப்போது, மணப்ெபண்ணின் முறைமாமன் அங்கு வந்துள்ளார். அப்போது, சிலர் அவரை நடனம் ஆட கூறி வற்புறுத்தி உள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். ஆனால், அவர்கள் விடாததால் அவர் நடனம் ஆடி உள்ளார்.  திருமண வரவேற்பு விழாவில் மணமகன், மணமகள் அமர்ந்திருந்தனர். ஆட்டம், பாட்டம் நீண்ட நேரமாக நீடித்தது.

அப்போது, மணப்பெண்ணின் பெண் தோழிகள் மணப்பெண்ணை நீயும் நடனமாட வா என கூப்பிட்டுள்ளனர். ஆனால், முதலில் தயங்கிய அவர் பின்னர் மேடையில் இருந்து எழுந்து சென்று நடனமாடினார். இதில் மணப்பெண் தனது முறை மாமன் உறவு முறையை சேர்ந்தவருடன் ஒரு பாடலுக்கு சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். இதனை பார்த்து மணமகன் அதிர்ச்சியடைந்தார். மேலும், மணமகன் பெண்ணிடம் ஏன் இதுபோல் நடனம் ஆடுகிறாய் என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குகள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது இருவீட்டார் பிரச்னையாக மாறியது. இரு வீட்டாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.    அப்போது, ஆத்திரத்தில் இருந்த மணமகன் திடீரென மணமகள் கன்னத்தில் அறைந்தார். இந்த திடீர் தாக்குதலால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். தாலி கட்டுவதற்கு முன்பே இப்படி அடித்தால் திருமணத்திற்கு பிறகு மணப்பெண் நிலை என்னவாகும் என கேட்டனர். இதில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக பெண்ணும், பெண் வீட்டாரும் திருமணத்தை நிறுத்தி விட்டு, மண்டபத்திலிருந்து வெளியேறினர். நிச்சயிக்கப்பட்ட அதேநேரத்தில் திருமணம் நடத்த வேண்டும் என பெண் வீட்டார் முடிவு செய்தனர். இதையடுத்து, மணப்பெண்ணின் முறைமாமன் பெற்றோர் சம்மதத்துடன் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Panruti ,
× RELATED ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிய பாமக