பள்ளி மாணவியை கடத்தி திருமணம் போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: ஆவடியில் டியூசனுக்கு சென்ற, பள்ளி மாணவியை திருமண ஆசைகாட்டி கடத்தி, திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். ஆவடி, கிரி நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள். ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்தாள். கடந்த 11ம் தேதி சிறுமி, காமராஜர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து டியூசனுக்கு சென்றார். பின்னர், இரவு வரை வீடு திரும்பவில்லை. அவளை பெற்றோர், உறவினர்கள் என பல்வேறு இடங்களிலும் தேடினர். அவளை பற்றி எந்த தகவலும் இல்லை.

இதுகுறித்து ஆவடி போலீசில், பெற்றோர் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், வியாசர்பாடி, கன்னிகாபுரம், சத்தியவாணிமுத்து நகர், 2வது தெருவை சோர்ந்த சுரேஷ் (22) என்பவர், சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து, நேற்று மதியம் சுரேஷை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், சிறுமியுடன் வாலிபர் சுரேஷுக்கு செல்போன் மூலமாக தொடர்பு ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். அப்போது அவர்களுக்குள், காதல் மலர்ந்தது. இதைதொடர்ந்து, கடந்த 11ம் தேதி சுரேஷ், ஆவடி வந்தார். அப்போது,  திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர், வியாசர்பாடியில் உள்ள ஒரு சர்ச்சில் வைத்து சிறுமியை திருமணம் செய்து, இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தினர் என தெரிந்தது. இதையடுத்து, போலீசார் சிறுமியை  பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories: