குடும்ப பிரச்னையால் விபரீத முடிவு 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

சென்னை: புதுப்பேட்டை காஞ்சி முதலி தெருவை சேர்ந்தவர் ஞானவேல்(44), ஆட்டோ டிரைவர். இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு, 2வதாக அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, பூஜா என்ற 2 மகள்கள் இருந்தனர். 2 நாட்களுக்கு முன் ஞானவேல் மற்றும் அவரது 2 மகள்கள் வீட்டிலிருந்து திடீரென காணாமல்போயினர். அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்படி எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், மறைமலைநகர் அருகே கடம்பூர் பகுதியில் நேற்று காலை விவசாய கிணற்றில் ஒருவர் 2 குழந்தைகளுடன் கட்டி பிடித்த நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல்வந்தது. போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சென்று 3 சடலங்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஞானவேல் என்பது தெரியவந்தது. மேலும், எழும்பூர் போலீசார் விசாரித்தனர். அதில், ஞானவேலின் மனைவி, `இப்படி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது’ என்று கேள்வி கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஞானவேல்  மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

Related Stories: