×

வாணியங்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

காளையார்கோவில், ஜன.20: நாட்டரசன்கோட்டையை அடுத்த முத்தூர் வாணியங்குடியில் முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருளின் எச்சம் கண்டெடுக்கப்பட்டது. நாட்டரசன்கோட்டையை அடுத்த வாணியங்குடியில் சென்னலக்குடி கசிவுநீர் குட்டையின் புறகரையில் மண் ஓடுகள் இருந்தது. இதனை சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, சிவகங்கை தலைவர் சுந்தரராஜன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து புலவர் காளிராசா தெரிவித்ததாவது, ‘‘ஆதிமனிதர்களிடத்திலும், இறந்தவர்களை பாதுகாப்பாக அடக்கம் செய்யும் முறை இருந்து வந்துள்ளது, அவர்களிடத்தில் உடலை அழியாமல் பாதுகாத்தால் மறுமை வாழ்வுக்கு அது உதவும் என்ற நம்பிக்கையும் இருந்தது. விலங்குகளிடமிருந்து இறந்த மனித உடலை பாதுகாக்கும் வண்ணம் 3500 ஆண்டுகளுக்கு முன் பெருங்கற்களை அடுக்கி கல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அக்காலம் வரலாற்றில் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது. இவை பல்வேறு இடங்களிலும் ஒரே மாதிரியாக காணப்படுவது வியப்புக்குரியது.

கல்வட்டங்களுக்கு உள்ளேயும் தாழிகள் காணப்படுவது உண்டு. முதுமக்கள் தாழிகள். இறந்தவர்களின் உடலை பெரிய பானை (நெற்குதிர்)போன்ற தாழியில் வைத்தோ அல்லது இறப்புக்கு பிறகான எலும்புகளை பாதுகாப்பாக வைக்கவோ இம்மாதிரியான முறைகளை 2000 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றியிருக்கலாம். மேலும் மறுமை வாழ்வு எண்ணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான பொருள்களையும் உள் வைக்கும் முறை இருந்துள்ளது.
சென்னலக்குடி கசிவுநீர் குட்டை புறகரையில் பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மண்ணுக்குள் புதையுண்டு மேற்பகுதி உடைந்து ஓடுகளாக காணப்படுகின்றன. நிலத்தின் மேற்பரப்பில் ஒரு சிதைவுண்ட தாழியில் ஓடுகளோடு இரும்பு பொருளின் எச்ச துணுக்குகளும் காணப்படுகின்றன. முத்தூர் வாணியங்குடி சென்னலக்குடி கசிவுநீர் குட்டைப் பகுதியிலிருந்து கௌரிப்பட்டி விலக்கு சாலையின் இருபுறங்களிலும் முதுமக்கள் தாழியின் ஓட்டு எச்சங்களை காண முடிகிறது. கசிவுநீர் குட்டையான இந்த இடம் நெடுங்காலமாக ஈமக்காடாக இருந்திருக்கலாம். இரும்பு பொருளின் எச்ச துணுக்குகளை சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஓரிரு நாளில் ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

Tags : Vaniyangudi ,
× RELATED வினைகளைப் போக்கும் விநாயகர் தலங்கள்