கூட்டுறவு வங்கி சார்பில் 17 விவசாயிகளுக்கு ₹18.20 லட்சம் கடனுதவி
சேந்தமங்கலம், ஜன.20: காளப்பநாயக்கன்பட்டி கூட்டுறவு வங்கி சார்பில், 17 விவசாயிகளுக்கு ₹18.20 லட்சம் பயிர் கடனுதவியை ராஜேஸ்குமார் எம்.பி., வழங்கினார். சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அட்மா குழுத்தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பொன்னுசாமி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., கலந்துகொண்டு டாப்செட்கோ திட்டத்தின் மூலம், 17 விவசாயிகளுக்கு ₹18.20 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்பு, கட்பீஸ் சென்டர்கள், மளிகை கடை, பலகார கடை உள்ளிட்டவை அமைத்துக்கொள்ள கடனுதவிகளை வழங்கினார். அவர் பேசுகையில், ‘முதன்முதலில் விவசாய கடன் தள்ளுபடி செய்த ஒரே முதல்வர் கருணாநிதி தான். தற்போது விவசாயிகளுக்கு அதிக அளவிலான பயிர்க்கடனை வழங்க சொல்லி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஏராளமானோருக்கு கூட்டுறவு சங்கம் மூலம் பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் நடேசன், கூட்டுறவு வங்கி செயலாளர் மணிவண்ணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் கீதா வெங்கடேசன், திமுக மாவட்ட பிரதிநிதி முருகேசன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர் ஜோதீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.