கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி அருகே உள்ள அம்மனேரி கிராமத்தில் நடந்த எருது விடும் திருவிழாவில் கொரோனா விதிமுறைகளை மீறி ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், செம்படமுத்தூர் அடுத்த கூலியம் பஞ்சாயத்து அம்மனேரி கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, எருதுவிடும் விழாவில் உள்ளூர் மாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விதிமுறைகளை மீறி சூளகிரி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருது விடும் விழாவை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதையொட்டி, கிருஷ்ணகிரி டிஎஸ்பி விஜயராகவன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.