2ம் போக பாசனத்திற்காக தொப்பையாறு அணையில் தண்ணீர் திறப்பு

தர்மபுரி, ஜன.20: தொப்பையாறு அணையில் இருந்து, 2ம் போக பாசனத்திற்காக அமைச்சர் எம்‌.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அருகே, தொப்பையாறு அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற பிரதான கால்வாய்களில், 2021-2022ம் ஆண்டு 2ம் போக பாசனத்திற்காக, 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கலெக்டர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

 தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்‌.ஆர்.கே.பன்னீர்செல்வம், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்து பேசியதாவது: தொப்பையாறு அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில், 2ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5330 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 19ம் தேதி முதல் நனைப்பிற்கு 5 நாட்களும், 2வது நனைப்பிற்கு 5 நாட்களும் என மொத்தம் 10 நாட்கள் தண்ணீர் விட்டும், 5 நாட்கள் நிறுத்தியும் ஆக மொத்தம் 4 நனைப்பிற்கு, 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தொப்பையாறு அணையில் இருந்து தற்போதுள்ள நீர் அளவைக் கொண்டு, அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 22 கனஅடியும், இடதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 48 கனஅடியும் என மொத்தம் 70 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், தர்மபுரி மாவட்டம் தொப்பூர், கம்மம்பட்டி கிராமம் மற்றும் சேலம் மாவட்டத்தில் செக்காரப்பட்டி, வெள்ளார், தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம் கிராமம் என 6 கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி., சேகர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார கண்காணிப்பு பொறியாளர் சாம்ராஜ், செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் மோகனப்பிரியா, ஒன்றிய செயலாளர்கள் ஏ.எஸ்.சண்முகம், எச்சனஅள்ளி சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு மாநில கவுரவ தலைவர் கலைச்செல்வன், நிர்வாகிகள் நாட்டான் மாது, தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: