நாசரேத், ஜன. 20: நாசரேத்தில் முன்விரோதத்தில் முதியவரை தாக்கிய அதிமுக பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் கமலசேகர் (72). இவருக்கும், இதே ஊரை சேர்ந்த ராம்கோபாலன் (51) என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் கமலசேகர், நாசரேத்தில் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராம்கோபாலனுக்கும், கமலசேகருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்கோபாலன், அவரது நண்பர் அருள்சேகர் மகன் சாது இம்மானுவேல் (31) ஆகியோர் கமலசேகரை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கமலசேகர் நாசரேத் போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ தங்கேஸ்வரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ராம்கோபாலன், சாது இம்மானுவேல் ஆகியோரை கைது செய்தார். ராம்கோபாலன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாது இம்மானுவேல் அதிமுக பிரமுகர் ஆவார்.