மார்த்தாண்டம், ஜன. 20 : மார்த்தாண்டத்தில் 18 வருடமாக பெண் தேடியும் கிடைக்காத விரத்தியில் ஊரைவிட்டு வெளியேறியவர் சாமியாராக திரும்பி வந்து அருள் வாக்கு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மார்த்தாண்டத்தை அடுத்த கரவிளாகம் பகுதியை ேசர்ந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்பட 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். தாயார் கூலி வேலை செய்து 3 பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினார். தற்ேபாது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இவர்களது மூத்த மகன் கண்ணன்(40). கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் 23வது வயதில் கண்ணனுக்கு பெண் பார்க்க குடும்பத்தார் தொடங்கினர். ஆனால் ஏழ்மை காரணமாக அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதையும் மீறி வரும் ஒருசில வரன்களையும் சிலர் அவதூறு கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 18 வருடங்களாக பெண் தேடியும் கிடைக்காததால் கண்ணன் கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டார்.இந்த நிலையில் திடீரென ஒருநாள் கண்ணனை காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என்று பல்வேறு இடங்களில் தேடியும் கண்ணன் குறித்து எந்தவித தகவலும் இல்லை. அவர் கேரளாவில் கட்டிட வேலைக்கு ெசன்று இருக்கலாம். விரைவில் திரும்பி வந்து விடுவார் என்று தாயார், உறவினர்கள் எண்ணி இருந்தனர். ஆனால் 5 ஆண்டுகளை கடந்த போதிலும் கண்ணனை காணவில்லை.
இதையடுத்து கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்து போயினர். இந்த நிலையில் கடந்த 17ம்தேதி கண்ணன் வீட்டுக்கு சாமியார் ஒருவர் வந்தார். கண்ணனின் தாயாருக்கு அது தனது மகன்போல தெரிந்தது. உடனே அவரை உற்று கவனித்தார். அப்போது அது கண்ணன் தான் என்பதை உறுதி செய்து கொண்டார். கண்ணன் காவி வேட்டி அணிந்து, கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் பட்டை, நீண்ட தாடி என்று சாமியார் ேபாலவே காட்சியளித்தார். இந்த தகவல் அறிந்ததும் ஊர் மக்கள் கண்ணன் வீட்டின் முன்பு திரண்டனர். கண்ணனை ஆச்சரியத்துடன் பார்த்த பலரும் அவரிடம் நலன் விசாரித்தனர். இந்த ேநரத்தில் கண்ணன் திடீரென அருள்வாக்கு கூற தொடங்கினார். ‘இன்னும் 24 மணி நேரத்தில் ஊரில் ஒருவர் இறக்க போகிறார். அது தன்னுடைய ஞானக்கண்களுக்கு தெரிய வருகிறது’ என்றார்.
இந்த நிலையில் ஊரில் நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டு கிடந்த கமலன் என்பவர் திடீரென இறந்தார். இதை அறிந்த ஊர் மக்கள், கண்ணன் கூறிய அருள்வாக்கு பலித்து விட்டது என்று நம்பினர். மேலும் கண்ணன், தான் திருவண்ணாமலை கோயில் சென்று சிவனின் அருளை பெற்று வந்து உள்ளதாகவும், இனி ஊரில் உள்ளவர்களுக்கு அருள்வாக்கு கூறி, அவர்கள் வாழ்வை உயர்த்த உள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் நின்று விடாமல், அருகில் உள்ள வண்ணான் குளத்தன்கரைக்கு சென்று அமர்ந்து விட்டார். தற்போது அங்கிருந்தவாறே அருள்வாக்கு கூறி வருகிறார். திருமணம் ஆகாமல் மன உளைச்சலில் ஊரைவிட்டு மாயமாகி சென்ற கட்டிடத் தொழிலாளி, திடீரென சாமியாராக திரும்பி வந்து, பொது மக்களுக்கு அருள்வாக்கு சொல்லும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.