நாகர்கோவில், ஜன. 20: குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 5 நாட்கள் கோயில்களில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. கோயில்களில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தது. பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், கோயில்களில் வெளியே நின்று சாமி கும்பிட்டு விட்டு சென்றனர். இந்நிலையில் 5 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நாகர்கோவில் நாகராஜாகோயில், சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன்கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன்கோயில் உள்பட முக்கியமான கோயில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.