ஆவடி: ஆவடியில், ஆட்டோ ஆர்சி புத்தகத்தை மீட்டு தருவதில் ஏற்பட்ட தகராறில், அக்காவை கத்தியால் வெட்டிக் கொல்ல முயன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர். ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஆயிஷா (39). பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் தையல்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் செய்யது அன்வரை பிரிந்து, கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார். ஆயிஷாவுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கின்றனர். ஆயிஷாவின் தம்பி ரியாஸ் (32). ஆட்டோ டிரைவர். பூந்தமல்லி அருகே மாங்காட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன் ஆயிஷா, ₹1.40 லட்சத்தில் ரியாசுக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்தார். அதன் ஆர்சி புத்தகத்தை தன்வசம் வைத்துக் கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆயிஷா, தனது தோழியின் அவசர தேவைக்காக ஆர்சி புத்தகத்தை அடமானம் வைத்து ₹1 லட்சம் வாங்கி கொடுத்துள்ளார். இதையறிந்த ரியாஸ், ஆட்டோவின் ஆர்சி புத்தகத்தை மீட்டு தரக்கோரி ஆயிஷாவிடம் வற்புறுத்தியுள்ளார்.