திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி கண்ணகப்பட்டு கிராமம் செல்லும் சாலையில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலமாக 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஏரியின் மையத்தில் மதகு, பாசன வாய்க்கால் உள்ளது. விவசாயம் தொடங்கும்போது ஏரியின் மதகை திறந்து விடும் பணியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியது. விவசாயிகளும் தங்களுக்கு தேவையான மதகை திறந்து பயன்படுத்தி வந்தனர்.
இதனிடையே மதகின் ஒரு பகுதி சேதமடைந்ததால் ஏரியில் உள்ள தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் மதகை அடைக்க முயற்சித்தும் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வீணாக வெளியேறும் ஏரி நீரை தடுத்து நிறுத்த முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.எனவே, இந்த ஏரியை பராமரிக்கும் பொதுப்பணித்துறை ஏரியின் மதகில் ஏற்பட்டுள்ள சேதத்தை பழுது பார்த்து சீரமைக்க வேண்டும், ஏரி நீர் முழுவதும் வெளியேறாமல் தடுக்க வேண்டும் என கண்ணகப்பட்டு கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.