தர்மபுரி, ஜன.19: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வெளியே நின்று வழிபட்டு சென்றனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, ஆகம விதிகளின்படி கோயில் வளாகத்திலேயே சுவாமி பல்வேறு வாகனங்களில் உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம், பல்வேறு சிறப்பு பூஜைகள், அலங்கார சேவை நடந்தது. பின்னர் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, தைப்பூசத் திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் வெளியே நின்று வழிபட்டனர்.