வடலூரில் தைப்பூச பெருவிழா வள்ளலார் சத்தியஞான சபையில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு அனுமதியில்லை

குறிஞ்சிப்பாடி, ஜன. 19: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் தைப்பூசப் பெருவிழாவையொட்டி நேற்று காலை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூசப் பெருவிழா திருவருட்பா முற்றோதல் மற்றும் சன்மார்க்க கொடியேற்றம் நேற்றுமுன்தினம் நடந்தது. அதேபோல், வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த மருதூர் சன்னதி, தண்ணீரில் விளக்கு ஏற்றிய கருங்குழி வள்ளலார் சன்னதி, ஒளி தேகம் ஆன மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் ஆகிய இடங்களிலும் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 5.50 மணி அளவில் சபையில் மணி அடிக்கப்பட்டது. சரியாக 6 மணி அளவில் கதவு திறக்கப்பட்டு, ஏழு திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி காண்பிக்கப்பட்டது. முதல்கால ஜோதியானது, 6 மணி முதல் 7 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை காண்பிக்கப்பட்டது. இதில் வடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள், சபை வளாகத்தில் தங்கி உள்ளவர்கள் மட்டும் ஜோதி தரிசனத்தை கண்டு மகிழ்ந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஜோதி தரிசனம் செய்தனர்.

மக்கள் நேரடியாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டதால், சபை நிர்வாகம் சார்பில் யூடியூப் சேனல் வழியாகவும், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவும் ஒளிபரப்பு செய்ய இந்து சமய அறநிலைய த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், சபை நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து ஜோதி தரிசனம் காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு காண்பிக்கப்பட்டது. பகல் 1 மணிக்கு நடந்த ஜோதி தரிசன விழாவில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஜோதி தரிசனத்தையொட்டி போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வெறிச்சோடிய சபை வளாகம்ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழாவில், சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தரிசனம் செய்வது வழக்கம். பெரும் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக இந்தாண்டு பக்தர்கள் ஜோதி தரிசனத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பொதுமக்கள், பங்கேற்க தடை என அறிவிக்கப்பட்டதால், வள்ளலார் வளாகம் முழுவதும், பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: