23 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் அதிரடி கைது 3 பேர் மீது கள்ளச்சந்தையர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கடலூர், ஜன. 19: ரேஷன் அரிசி கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா மாங்குளம் அருகே கடலூர் குடிமைப்பொருள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 460 மூட்டைகளில், சுமார் 23 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த அரிசி மூட்டைகளை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா மங்களூர் பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் ரஞ்சித்(25), சித்திரவேல் மகன் வேல்முருகன்(30), வேலூர் மாவட்டம் அரியூர்குப்பத்தை சேர்ந்த உலகமூர்த்தி மகன் புருஷோத்தமன்(32), கோவிந்தன் மகன் பெருமாள் (36), வேலூர் மாவட்டம் சங்கரன்பாளையம் மணி மகன் ராமச்சந்திரன் (51) கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா மங்களூர் பகுதி மாரிமுத்து மகன் ராமலிங்கம்(56) ஆகிய 6 பேரும் சேர்ந்து விளம்பாவூர், வேப்பூர் மற்றும் மங்களூர் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை, குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்க ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து இவர்களை கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ரஞ்சித், வேல்முருகன், லாரி உரிமையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது அரிசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர்களை கள்ளச்சந்தையர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் கள்ளச்சந்தையர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: