பவானி, ஜன. 19: ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 57 கிமீ பாசன கால்வாய் வெட்டிய காலிங்கராயன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காலிங்கராயன் தினத்தையொட்டி பவானி அருகே மேட்டுநாசுவம்பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினர். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர், காலிங்கராயன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி 1282ம் ஆண்டு காலிங்கராயன் கால்வாயில் இதே நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இப்பணிக்கு காரணமாக இருந்தவர் காலிங்கராயன். எவ்விதமான விஞ்ஞான முன்னேற்றம் இல்லாத காலத்தில் போதிய வசதிகள் இல்லாத நேரத்தில் தனது சொந்த முயற்சியில் சுமார் 57 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டினார்.
இன்றைக்கு மூன்று போகமும் தண்ணீர் பாயும் வகையில் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகளை, தான் வெட்டிய கால்வாயின் மூலம் இணைத்த இவர், நதிகள் இணைப்புக்கு முன்னோடியாக உள்ளார். பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர் காவிரியில் கலந்து கடலுக்கு வீணாகச் சென்று கொண்டிருந்தது. சுமார் 700 ஆண்டுக்கு முன்பாக தொலைநோக்குப் பார்வையுடன் வீணாகும் தண்ணீரைக் கொண்டு விவசாயத்துக்கு பயன்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றியவர் காலிங்கராயன். இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.