தூத்துக்குடியில் வாலிபர் கொலையில் கூலி தொழிலாளி கைது

தூத்துக்குடி, ஜன. 19: தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர் வியாஸ் நகரை சேர்ந்த லூயிஸ் பெட்டின் மகன் அலெக்ஸ் (31). கட்டிடத் தொழிலாளியான இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 13ம்தேதி அதிகாலை தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் அடித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற சிப்காட் போலீசார், உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து  விசாரணை நடத்திவந்தனர். இதில் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான்சன் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.

 இதையடுத்து இதுதொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தலைமறைவான ஜான்சனை உள்ளிட்டோரை தேடிவந்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய ஜான்சனின் நண்பரான அண்ணாநகரை சேர்ந்தவரும்,  லித்தொழிலாளியுமான ஜெயசீலன் (34) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதன் விவரம் வருமாறு: கடந்த மாதம் ஜான்சனின் கார் கண்ணாடியை அலெக்ஸ் உடைத்துள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஜான்சனை அலெக்ஸ் சரமாரியாகத் தாக்கினாராம். இதனால் தீராத ஆத்திரத்தில் இருந்துவந்த  ஜான்சன் அலெக்சை சம்பவத்தன்று கொலை செய்துள்ளார். இதில் ஜான்சனை சம்பவ இடத்திற்கு ஜெயசீலன் தனது பைக்கில் அழைத்து சென்றதோடு கொலை நடந்த பிறகு அங்கிருந்து தப்பிச்செல்ல  அழைத்துத் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து ஜெயசீலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: