தைப்பூசத்தை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

கடையம், ஜன.19: தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடந்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யொட்டி ஆனை வடிவ மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோயிலில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வாழ்ந்து மூலிகை ஆராய்ச்சி செய்த சிறந்த தலமாகும். உலகத்திலேயே முதல் கபால அறுவை சிகிச்சை நடைபெற்ற இடமாக இந்த தலம் விளங்குகிறது. தைப்பூசத்தையொட்டி நேற்று காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடந்து கோயில் மலைமேல் உள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்து, முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து முருகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண சீர்வரிசைக்காக நவதானியங்கள், பழங்கள் உள்ளிட்ட 31  பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டு, மேளதாளங்கள் முழங்க முருகன்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். கோயில் சார்பாக அன்னதானத்தை பார்சல்களாக கட்டி கிராம கிராமமாக கொண்டு வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Related Stories: