பணகுடி , ஜன. 19: பணகுடி மற்றும் வள்ளியூர் பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பணகுடி அண்ணாநகர் பள்ளிவாசல் அருகில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் 485 மீட்டர் நீளத்தில் வாறுகால் அமைத்தல், தர்மபுரம், சொக்கலிங்கபுரம், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் 2.200 மீட்டர் நீளத்தில் பைப்லைன் விஸ்தரிப்பு பணி செய்தல், ரோஸ்மியாபுரம் சுடலை கோவில் அருகில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் 665 மீட்டர் நீளத்தில் வாறுகால், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், நம்பியன்விளை, வள்ளியூர், கோட்டையடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பணிகளை பூமிபூஜை நடத்தி தொடக்கி வைத்தார்.பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசும்போது ‘தற்போது கோயில் நிலங்களில் இருப்பவர்களுக்கு வாடகை அதிகளவு உள்ளதாக எனக்கு தகவல் தந்துள்ளனர். இது குறித்து அறநிலைய துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். நாங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து உங்களின் நிலையை முதல்வரிடம் எடுத்து கூறி விரைவில் இதற்கு ஒரு தீர்வினை முதல்வர் மூலம் பெற்றுத்தருவேன். மேலும் பள்ளிவாசல் தெருவில் உள்ளவர்கள் எங்கள் பகுதியிலும் பேவர் பிளாக் அமைத்து தரவேண்டும் என கூறினார்கள். அதற்காக ஒரே வாரத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேட்டதும் கொடுக்கும் நல்ல முதல்வர் நமக்கு கிடைத்துளார். நீங்களும் எங்களுக்கு உதவியாக இருங்கள். இவ்வாறு பேசினார்.