வேதாரண்யம், ஜன.19: வேதாரண்யம் அருகே வாய்மேட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையம் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையொட்டி சுகாதாரத்துறையினர் இங்கு புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.38 லட்சம் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. நேற்று இந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. விழாவில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் உதய முருகையன், மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், ஒப்பந்தக்காரர் சிவகுமார், வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் அன்பரசு உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.